மோகனூர், ராசிபுரத்தில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

ராகு, கேது பெயர்ச்சியையொட்டி மோகனூர், ராசிபுரத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Update: 2019-02-13 22:00 GMT
மோகனூர், 

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் ராகுக்கு தனி சன்னதியும், கேதுக்கு தனி சன்னதியும் உள்ளது. இங்கு ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று காலை முதல் பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடைபெற்றது.

அதேபோல் மோகனூர் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் உள்ள ராகு, கேதுக்கும், எஸ்.வாழவந்தி சிங்காரபாறை விநாயகர் கோவிவில் உள்ள ராகு கேதுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ராசிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் நாகர், நவக்கிரக சன்னதியில் சரணாலய ஆஸ்ரம நவக்கிரக பக்தர்கள் குழுவினர் சார்பில் ராகு கேது பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி விநாயகர், துர்க்கையம்மன், நாகர், நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராகு, கேதுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனையும், பக்தர்கள் வழிபாடும் நடந்தது. இரவில் நவக்கிரக சன்னதியில் 108 விளக்குகள் ஏற்றி பக்தர்களால் ராகு, கேது பெயர்ச்சி விளக்கம், உலக நலவழிபாடு நடந்தது.

இதில் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நவக்கிரக பக்தர்கள் குழு செயலாளர் ஆசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்