காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2019-02-13 22:15 GMT
திருச்சி,

திருச்சி அருகே இனாம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது27). மரம் ஏறும் கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2010-ம் ஆண்டு, 20 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக கூறினார். மேலும் அவருடன் முருகன் பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த இளம்பெண் கர்ப்பமானார். இதனால் தன்னை திருமணம் செய்யுமாறு முருகனிடம் கேட்டார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்து, இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மகிழேந்தி நேற்று தீர்ப்பளித்தார். இதில் முருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். 

மேலும் செய்திகள்