உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை காதலியை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால் பரிதாபம்

காதலியை திருமணம் செய்ய தன்னுடைய பெற்றோர் சம்மதிக்காததால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Update: 2019-02-13 23:30 GMT

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி காலனியை சேர்ந்தவர் வனராஜா. அவருடைய மகன் சதீஸ் (வயது 26). இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

சதீஸ் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணையே தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் இதற்கு அவருடைய பெற்றோர் சம்மதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சதீஸ் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது மீண்டும் தனது காதல் திருமணம் குறித்து பெற்றோரிடம் பேசியுள்ளார். ஆனால் அவருடைய திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த சதீஸ் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில் சதீஸ் நேற்று முன்தினம் இரவு வீட்டின் ஒரு அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலையில் அவருடைய பெற்றோர் சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் பிணமாக தொங்கிய மகனை கண்டு அவர்கள் கதறினர். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார், சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்காததுதான் தற்கொலைக்கு காரணமா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்