விளாத்திகுளம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை கணவரின் மதுப்பழக்கத்தால் சோகமுடிவு

விளாத்திகுளம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கணவரின் மதுப்பழக்கத்தால் மனமுடைந்த அவர் இந்த சோகமுடிவை தேடிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-02-13 23:00 GMT
விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே பல்லாகுளம் கீழ தெருவைச் சேர்ந்தவர் ஆதி ராமு. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சின்ன முனியம்மாள் (வயது 28). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஆதி ராமுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவில் ஆதி ராமு மது குடித்து விட்டு, தனது வீட்டுக்கு சென்றார். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சின்ன முனியம்மாள் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, சின்ன முனியம்மாளைக் காப்பாற்றி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் சின்ன முனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து குழந்தைகள், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்ததால், உதவி கலெக்டர் சிம்ரஞ்சித் சிங் கலோன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்