பலத்த காற்று: குளச்சல் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

குளச்சல் கடலில் பலத்த காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2019-02-14 23:00 GMT
குளச்சல்,

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுமரம், மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பார்கள். இவர்களது வலையில் உயரக மீன்கள் அதிகளவில் சிக்கும்.

இந்த மீன்களை துறைமுக ஏலக்கூடத்திற்கு எடுத்து வந்து ஏலமிடுவது வழக்கம். அவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்தவர்களும், கேரள வியாபாரிகளும் போட்டிபோட்டு ஏலம் எடுப்பார்கள். கட்டுமர மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு சென்று விட்டு மதியம் கரை திரும்புவார்கள்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குளச்சல் கடல் பகுதியில் காலநிலை மாற்றம் காணப்படுகிறது. கடலில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவர்கள், மீன்பிடிக்க முடியாமல் தங்கள் படகுகளை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தியுள்ளனர்.

குளச்சல் கடலில் நேற்றும் பலத்த காற்று நீடித்தது. இதனால், விசைப்படகு மீனவர்கள் கரை திரும்ப தொடங்கினர். ஏற்கனவே, வந்தவர்கள் மீண்டும் கடலுக்குள் செல்லாமல் தங்களது விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், கட்டுமர, வள்ளங்களில் மீன்பிடிக்க செல்பவர்கள் நேற்று கடலுக்குள் செல்லவில்லை. அவர்கள் தங்களது கட்டுமரம் மற்றும் வள்ளங்களை கரையோரம் மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் சந்தையில் மீன் வரத்து குறைந்தது.

மேலும் செய்திகள்