வங்கி அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு

மார்த்தாண்டம் அருகே தனியார் வங்கி அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் பறித்த மர்மநபர்கள் தப்பி விட்டனர்.

Update: 2019-02-14 22:15 GMT
குழித்துறை,

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு சிங் (வயது 24). மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் செயல்பிரிவு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் மதியம் இவர் மார்த்தாண்டம் அருகே நல்லூர் பூங்கா பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து ஜெரால்டு சிங்கை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு ஜெரால்டு சிங், தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் திடீரென ஜெரால்டு சிங்கை அரிவாளால் வெட்டி, அவரிடம் இருந்த ரூ.800–ஐ பறித்து விட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த ஜெரால்டு சிங் வலியால் அலறி துடித்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜெரால்டு சிங் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

ஜெரால்டுசிங்கை அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல், வழிப்பறி கும்பலாக இருக்கலாமா? அல்லது முன்விரோதம் காரணமாக ஜெரால்டுசிங்கை வழிமறித்து தாக்கினார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.  

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கி அதிகாரியை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்