காதலர் தினம் கொண்டாட்டம் மாமல்லபுரத்தில் குவிந்த காதல்ஜோடிகள்

காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் மாமல்லபுரத்தில் நேற்று ஏராளமான காதலர்கள் குவிந்தனர்.

Update: 2019-02-14 22:15 GMT
மாமல்லபுரம், 

காதலர்களுக்காக போராடிய பாதிரியார் வாலன்டைன் நினைவாக, உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதியை, காதலர் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டின் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் காதலர்கள் பரிசு பொருட்களை வாங்கி கொடுத்தும், சுற்றுலாத்தலங்களுக்கு சென்றும் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டை போல இந்த வருடமும் நேற்று ஏராளமான காதல் ஜோடிகள் வருகை தந்து காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

காலை 11 மணி முதல் சாரை, சாரையாக காதல் ஜோடிகள் மோட்டார் சைக்கிள்களிலும், பஸ்களிலும் வரத்தொடங்கினார்கள். சென்னை, தாம்பரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் பல இடங்களில் இருந்து ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் முக்கிய புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

கடற்கரை கோவில், ஐந்து ரதம் பகுதியில் உள்ள கடைகளில் காதலர்கள் தங்கள் மனம் கவர்ந்த பரிசுப்பொருட்களை காதலிக்கு வாங்கி கொடுத்தனர். பல காதலர்கள் ரோஜா மலர் வாங்கி தன் காதலியின் தலையில் சூடி மகிழ்ந்தனர். சில பெண்கள் தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாத வகையில் சுடிதார் துப்பட்டாவால் முகத்தை மூடியபடி காதலனுடன் வலம் வந்தனர்.

காதல் ஜோடிகளில் சிலர் செல்போனில் ‘செல்பி’ எடுத்தும் மகிழ்ந்தனர். சில காதல் ஜோடிகள் கலங்கரை விளக்கத்தில் உள்ள மலைக்குன்றில் காதல் சின்னங்களையும், தங்கள் பெயர்களையும் பெயிண்ட்டால் எழுதி மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்