பெரம்பலூரில் காதல் திருமணம் செய்த பெண் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூரில் காதலர் தினத்தில் தனது காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-14 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா சித்தளி கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜ்(வயது 32). கூலித்தொழிலாளி. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் ரேகா(29). கடலூரில் கட்டிட வேலைக்கு சென்றபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். விஜயராஜ் ரேகாவுடன் சித்தளியில் தனது பெற்றோருடன் கூட்டுகுடித்தனமாக வசித்துவந்தார். ஓர் ஆண்டு இருவரும் ஒன்றாக வசித்துவந்தனர்.

இந்த நிலையில் மாமனார்- மாமியார் தன்னை கொடுமைப்படுத்துவதாக ரேகா விஜயராஜிடம் கூறினார். மேலும் தனிக்குடித்தனம் வைக்குமாறு ரேகா வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு விஜயராஜ், தனது பெற்றோருடன் அனுசரித்து போகுமாறு பதில் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், ரேகா விஜயராஜை பிரிந்து திட்டகுடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே ரேகா நேற்று மதியம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 5 லிட்டர் மண்எண்ணெய் கேனுடன் வந்தார். பின்னர் தனது காதல் கணவருடன் தன்னை சேர்த்துவைக்க வலியுறுத்தி, தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொள்ள முயற்சி செய்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரேகாவை மீட்டு பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். காதலர் தினத்தன்று கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜயராஜ் குடும்பத்தினருடன் ரேகாவை மீண்டும் சேர்த்து வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்