அமித்ஷா கூட்டத்துக்கு சென்ற போலீஸ் வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது; வாலிபர் பலி
அமித்ஷா கூட்டத்துக்கு சென்ற போலீஸ் வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பவானி,
ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்பு காக்கத்தான் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மகன் பரமசிவம் (வயது 35). இவர் லட்சுமிநகரில் இருந்து முள்ளாம்பரப்புக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நேற்று மதியம் 2.30 மணி அளவில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முள்ளாம்பரப்புக்கு செல்வதற்காக வலது புறம் திரும்பினார். அப்போது அந்த வழியாக சித்தோடு ஸ்ரீநகர் பகுதியில் நடந்த பா.ஜ.க. வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள் கூட்டத்துக்கு போலீஸ் வேன் சாப்பாடு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் வெள்ளோடு கே.கே.வலசு பகுதியை சேர்ந்த ஏட்டு குமார் இருந்தார். எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளும், போலீஸ் வேனும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பரமசிவம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பரமசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.