சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி மாணவர்கள் குழுவினர் 40 பேர் செல்கிறார்கள்

சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

Update: 2019-02-14 22:15 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு இப்பகுதியில் உள்ள யானை, வரையாடு, புலி, சிறுத்தை, காட்டுமாடு, புள்ளி மான், மிளா, ஆகிய வன விலங்குகள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு பணி டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற உள்ளது.

ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் 40 பேர் வனப்பகுதியில் தங்கி இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான பயிற்சி முகாம் வனவியல் விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. வன உயிரின காப்பாளர் முகம்மது சபாப் தலைமையில் டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜபாளையம் வன ஆர்வலர் தன்னார்வக் குழு சார்பில் ஷியாம் ராஜா, வேல்சாமி, புகைப்பட கலைஞர் முகமது ஜக்கிரியா ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

மாணவர்களாகிய நீங்கள் வனத்துக்குள் சென்று வன விலங்குகளை கணக்கெடுக்க செல்கிறீர்கள். முதலில் உங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம், வனத்திற்குள் வாசனை திரவியங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ரேடியோ போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. சத்தமிட கூடாது என்பன போன்ற அறிவுரைகளை கூறினர்.

இதனைத் தொடர்ந்து கணக்கெடுப்பில் ஈடுபடும் குழுவினர் வனப்பகுதிக்குள் சென்றனர். அங்கு அவர்கள் வன விலங்குகளை நேரடியாக பார்த்தும், அவைகளின் ஒலி, நடமாட்டம், எச்சம், தோல் கழிவுகள் ஆகியவற்றை கொண்டு கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.

மேலும் செய்திகள்