மூங்கில்துறைப்பட்டு அருகே, குடிபோதையில் எலி மருந்து தின்ற வாலிபர் சாவு

மூங்கில்துறைப்பட்டு அருகே குடிபோதையில் எலி மருந்து தின்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-02-15 23:45 GMT
மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மணி (வயது 24), தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உடைய இவர் சம்பவத்தன்று குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த ரொட்டியை சாப்பிட்ட மணி, அதன் அருகில் இருந்த எலி மருந்தையும் போதையில் தின்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்