திருக்குறுங்குடி வனப்பகுதியில் மான் கொம்புடன் புகைப்படம் எடுத்த போலீசார் வாட்ஸ்-அப்பில் வெளியானதால் பரபரப்பு

திருக்குறுங்குடி வனப்பகுதியில் மான் கொம்புடன் போலீசார் புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படம் வாட்ஸ்-அப்பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-15 22:00 GMT
ஏர்வாடி, 

திருக்குறுங்குடி வனப்பகுதியில் மான் கொம்புடன் போலீசார் புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படம் வாட்ஸ்-அப்பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாட்ஸ்-அப்பில் புகைப்படம்

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி வனப்பகுதியில் 4 பேர் கையில் மான் கொம்புடன் நிற்பது போன்ற புகைப்படம் வாட்ஸ்-அப்பில் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதுகுறித்து களக்காடு வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த புகைப்படத்தில் இருப்பது திருக்குறுங்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் அவருடன் பணியாற்றும் சக போலீசார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அப்போது, வனத்துறை சார்பில் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருக்குறுங்குடி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வனவிலங்குகளை கண்காணிக்கும் தானியங்கி கண்காணிப்பு கேமரா திருட்டு போனது. இதுகுறித்து விசாரணை நடத்த திருக்குறுங்குடி போலீசார் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

வனத்துறையினர் விசாரணை

அப்போது அங்கு கிடந்த மான்கொம்பை எடுத்து, அதனை கைகளில் வைப்பது போன்று புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தை சக போலீசார் ஒருவரே சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மான் கொம்புடன் போலீசாரின் புகைப்படம் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்