‘பப்ஜி’ விளையாட்டு மோகத்தால் தகராறு தங்கையின் வருங்கால கணவரை கத்தியால் குத்திய வாலிபர் கல்யாணில் அதிர்ச்சி சம்பவம்

பப்ஜி விளையாட்டு மோகத்தால் ஏற்பட்ட தகராறில் தங்கையின் வருங்கால கணவரை வாலிபர் கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் கல்யாணில் நடந்து உள்ளது.

Update: 2019-02-15 23:15 GMT
அம்பர்நாத்,

பப்ஜி விளையாட்டு மோகத்தால் ஏற்பட்ட தகராறில் தங்கையின் வருங்கால கணவரை வாலிபர் கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் கல்யாணில் நடந்து உள்ளது.

பப்ஜி விளையாட்டு

தானே மாவட்டம் கல்யாண் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜ்னிஷ் (வயது27). இவர் ஆன்லைன் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக இருந்து உள்ளார். சம்பவத்தன்று ராஜ்னிஷ், பப்ஜி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனில் சார்ஜ் இல்லாமல் போனது.

இதனால் செல்போனில் சார்ஜ் போட சார்ஜரை பார்த்தார். இதில் சார்ஜர் ஒயர் அறுந்து இருந்தது. சார்ஜர் ஒயர் அறுந்ததற்கு தனது தங்கை தான் காரணம் என அவர் நினைத்தார். எனவே அவர் இதுகுறித்து தங்கையிடம் சண்டை போட்டார். மேலும் அவளது மடிக்கணினியையும் சேதப்படுத்தி உள்ளார்.

கத்தியால் குத்தினார்

இந்தநிலையில் தங்கைக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்ட ஓம் பவ்தான்கர் (32) என்பவர் அங்கு வந்தார். அவர் 2 பேருக்கும் இடையே நடந்த சண்டையை விலக்க முயன்றார். மேலும் அவர் ராஜ்னிஷ் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இருப்பது குறித்து அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தங்கையின் வருங்கால கணவர் என்றும் பாராமல் ஓம் பவ்தான்கரை வயிற்றில் குத்தினார்.

இதில் படுகாயமடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பப்ஜி விளையாட்டு மோகத்தால் வாலிபர் ஒருவர் தங்கையின் வருங்கால கணவரை கத்தியால் குத்திய சம்பவம் கல்யாண் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் சமீபத்தில் வாலிபர் ஒருவர் தனது தந்தை, பப்ஜி விளையாட விலை உயா்ந்த செல்போன் வாங்கி தரவில்லை என தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்