“உலகில் இருந்து தீவிரவாதம் வேரோடு அகற்றப்பட வேண்டும்” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

பாகிஸ்தானுக்கு நமது நாடு பதிலடி கொடுக்க தொடங்கிவிட்டது எனவும், உலகில் இருந்து தீவிரவாதம் வேரோடு அகற்றப்பட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Update: 2019-02-16 23:15 GMT
திருச்சி,

அரியலூர் கார்குடி சிவசந்திரன், கயத்தாறு சுப்ரமணியன் ஆகிய 2 வீரர்களும் தங்களது உயிரை இந்த நாட்டிற்காக தியாகம் செய்து தமிழகத்தை பெருமைப்படுத்தி உள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. தீவிரவாதம் வேராடும், வேரடி மண்ணோடும் இந்த உலகில் இருந்து அகற்றப்பட வேண்டும். சிவசந்திரனின் மனைவி காந்திமதி கர்ப்பிணியாக இருப்பது நம்மை நிலை குலைய வைக்கிறது.

சிவசந்திரன் விடுமுறையில் ஊருக்கு வந்த போது ராணுவ வீரர்கள் அணியும் மாதிரி உடையை அவரது குழந்தைக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். நான் அவர்களது வீட்டிற்கு சென்றபோது அங்கு அந்த குழந்தையும், அவரது தந்தையும் ராணுவ வீரர்கள் போன்ற உடை அணிந்திருந்தது என்னை நெகிழ செய்தது.

அவர்கள் இல்லத்தில் உணர்வு, உடை எல்லாவற்றிலும் தேசப்பற்று இருக்கிறது. ‘என் குழந்தையை ஐ.பி.எஸ். படிக்க வைப்பேன், என் கணவர் மாதிரியே நாட்டிற்கு காவலுக்கு இருக்க வேண்டும்’ என சிவசந்திரன் மனைவி காந்திமதி சொன்னது உண்மையிலேயே என்னை நெகிழ வைத்தது. அந்த குடும்பம் எல்லாவித பாதுகாப்போடு இருக்க வேண்டும். தீவிரவாத தாக்குதல் எதுவும் நடக்க கூடாது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என தொண்டர்கள் அனைவரும் கூறி வருகின்றனர். நமது நாடு அந்த பதிலடியை கொடுக்க தொடங்கியிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்