நெல்லை அருகே பரபரப்பு: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

நெல்லை அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-16 22:15 GMT
நெல்லை, 

நெல்லை அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவிலுக்கு பயணம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் முத்துகுமார். இவருடைய மகன் பாக்கிய செல்வம் (வயது 23). இவர் உவரியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று உறவினர்களுடன் ஒரு காரில் புறப்பட்டனர். அந்த காரில் 5 பேர் பயணம் செய்தனர். காரை பாக்கிய செல்வம் ஓட்டினார்.

அந்த கார் நேற்று காலை 7 மணிக்கு கங்கைகொண்டான் சிப்காட் பகுதியை கடந்து 4 வழிச்சாலையில் நெல்லையை நோக்கி வந்துகொண்டிருந்தது.

தீப்பிடித்து எரிந்தது

அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன்பகுதியில் இருந்த என்ஜினில் இருந்து புகை வந்தது. நடுரோட்டில் கார் தீப்பிடித்துக்கொண்டதை அறிந்த பாக்கிய செல்வம் உடனடியாக காரை ரோட்டின் ஓரமாக நிறுத்தினார்.

பின்னர் அவசரமாக காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர். காரின் முன்பக்கமாக சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால், திபுதிபுவென தீ பற்றி எரிந்தது. இதில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இருந்தபோதும், கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்