விஜயகோபாலபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

விஜயகோபாலபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-02-16 23:00 GMT
பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் ஊராட்சி விஜயகோபாலபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அப்பகுதி மக்கள் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை விஜயகோபாலபுரத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஆலத்தூர் வட்டாட்சியர் ஷாஜகான், வருவாய் ஆய்வாளர் பழனியப்பன், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், விஜயகோபாலபுரம் பகுதியில் விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி- சென்னை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்