பழனி அருகே விவசாயி வீட்டில் 15 பவுன்- ரூ.1½ லட்சம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

பழனி அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் மற்றும் ரூ.1½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-16 22:00 GMT
நெய்க்காரப்பட்டி,

பழனி அருகே உள்ள சின்னக்கலையம்புத்தூர் ஆர்.ஜி.நகர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 70). விவசாயி. கடந்த 14-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அரவக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பி சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வேலுச்சாமி குடும்பத்துடன் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, துணிகள் கீழே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகள், ரூ.1½ லட்சம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து பழனி தாலுகா போலீசில் வேலுச்சாமி புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் மர்ம நபர் கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த நகை, பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே மோப்பநாய் லிண்டா வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

பின்னர் இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணத்தை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்