கவர்னர் பொறுப்பில் இருந்து கிரண்பெடியை விடுவிக்க வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி

புதுவை மாநில கவர்னர் பொறுப்பில் இருந்து கிரண்பெடியை, மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

Update: 2019-02-17 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் 5-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நாராயணசாமியை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று மாலை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அதன்பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர் கிரண்பெடி புதுவை ஆட்சியை முடக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். எனவே கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் 5-வது நாளாக தர்ம யுத்தம் நடத்தி வருகிறார்.

கிரண்பெடி முன்பு அரசு அதிகாரியாகத்தான் செயல்பட்டார். அவருக்கு அரசு நிர்வாகம் குறித்து போதிய அனுபவம் கிடையாது. எனவே மத்திய அரசு கவர்னர் பொறுப்பில் இருந்து கிரண்பெடியை உடனடியாக விடுக்க வேண்டும். புதுவை அரசு சிறப்பாக செயல்பட மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்