இந்திய ராணுவத்தின் பலத்தை பாகிஸ்தானுக்கு காண்பிக்க வேண்டும் சிவசந்திரனின் மனைவி பேட்டி

இந்திய ராணுவத்தின் பலத்தை பாகிஸ்தானுக்கு காண்பிக்க வேண்டும் என்று பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சிவசந்திரனின் மனைவி காந்திமதி கூறினார்.

Update: 2019-02-18 22:15 GMT
ஜெயங்கொண்டம்,

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில், ஒருவரான அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடியை சேர்ந்த சிவசந்திரனின் உடல் கடந்த 16-ந் தேதி அவருடைய வீட்டின் அருகே உள்ள சிவசந்திரனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திரைப்பட நடிகர் ரோபோ சங்கர், சிவசந்திரன் வீட்டிற்கு நேரில் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.1 லட்சம் வழங்கினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், இன்றைக்கு நாம் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறோம் என்றால், அதற்கு இவர்களை (ராணுவ வீரர்கள்) போன்ற எல்லை சாமிகள் தான் காரணம். இன்றைக்கு நமது தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்களை நாம் இழந்து நிற்கிறோம். இது ஈடுகட்ட முடியாத இழப்பாகும். சிவசந்திரன், சுப்ரமணியன் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.

தொடர்ந்து சிவசந்திரனின் மனைவி காந்திமதி நிருபர்களிடம் கூறுகையில், இந்திய ராணுவத்தின் பலத்தை பாகிஸ்தான் அரசுக்கு காண்பிக்க வேண்டும். இனியும் இதுபோன்ற உயிரிழப்புகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், என்றார். 

மேலும் செய்திகள்