செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

சுசீந்திரம் அருகே செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-02-19 22:15 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் அருகே வண்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் அஜய்(வயது 18). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், இவர் சரியாக கல்லூரிக்கு செல்லாம் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 அஜய் தனது பெற்றோரிடம் புதிய செல்போன் வாங்கித்தருமாறு கேட்டு வந்தார். ஆனால், பெற்றோர் செல்போன் வாங்கி கொடுக்காமல் இருந்து வந்தனர். பெற்றோர் செல்போன் வாங்கி கொடுக்காததால் அஜய் மணமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.


இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜய் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய பெற்றோர் மகன் வி‌ஷம் குடித்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அஜய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்ணன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 செல்போன் வாங்கித் தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்