திருமண மண்டபத்தில் மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை சாவு

படப்பை அருகே திருமண மண்டபத்தில், மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2019-02-19 20:49 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த பட்டாளம் புளியந்தோப்பில் வசித்து வருபவர் முகம்மது நசீம் (வயது 25). பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய மனைவி ரெஜினாகாத்தூன். இவர்களுக்கு 3 வயதில் முகம்மது அயான் என்ற ஆண் குழந்தை இருந்தது.

முகம்மது நசீம், தனியார் சமையல் காண்டிராக்டர் ஒருவரிடம் தனது மனைவியுடன் வேலை செய்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் முகம்மது நசீம் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை முகம்மது அயான், திருமண மண்டபத்தின் வெளிப்பகுதியில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த மின்விளக்கின் வயரை தொட்டுள்ளான்.

மின்சாரம் தாக்கி சாவு

அப்போது மின்கசிவு காரணமாக குழந்தையை மின்சாரம் தாக்கியது. இதில் குழந்தை அலறியபடி கீழே விழுந்தது. உடனே குழந்தையை மீட்டு படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள். மேலும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்