வட்டார அளவில் பெண்களுக்கான கபடி போட்டிகள் நாளை மறுநாள் மாரத்தான் நடக்கிறது

பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார அளவில் பெண்களுக்கான கபடி போட்டிகள் நேற்று நடந்தது. நாளை மறுநாள் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடக்கிறது.

Update: 2019-02-20 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம் என்ற உறுதிமொழியுடன் மத்திய-மாநில அரசுகள் மற்றும் பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை ஆகியவை இணைந்து வட்டார அளவிலான பெண்களுக்கான கபடி போட்டிகள் நேற்று நடத்தினர். இதில் பெரம்பலூர் வட்டார அளவிலான கபடி போட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜூ தொடங்கி வைத்தார்.

இதில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் பள்ளி அணிகளும் கலந்து கொண்டன. இதே போல வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் வட்டார அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. வட்டார அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பிடித்த அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரமும், சுழற்கோப்பையும், 2-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ. ஆயிரத்து 500-ம்,சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

வட்டார அளவில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6 ஆயிரமும், 2 இடம் பெறும் அணிக்கு ரூ.3 ஆயிரத்து 600-ம், 3-ம் இடம் பெறும் அணிக்கு ரூ.2 ஆயிரத்து 400-ம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படவுள்ளது.

இதே போல மாவட்ட அளவில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 6 மணியளவில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடத்தப்படவுள்ளது. இதில் முதலிடம் பெறும் வீராங்கனைக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடத்திற்கு ரூ.7 ஆயிரமும், 3-ம் இடத்திற்கு ரூ.5 ஆயிரமும், 4-ம் இடத்திற்கு ரூ.3 ஆயிரமும், 5-ம் இடத்திற்கு ரூ.2 ஆயிரமும், 6-ம் இடம் முதல் 10-ம் இடம் வரை பெறும் வீராங்கனைகளுக்கு தலா ரூ. ஆயிரமும் வழங்கப்படும். மேலும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து பெண்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்