தேசிய அளவிலான போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கு உதவித்தொகை கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்

தேசிய அளவிலான போட்டிகளில் சாதித்த மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-20 22:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

உயர்நிலைபள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் ஊக்க உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 2018–19–ம் கல்வி ஆண்டிற்கு உதவித்தொகை பெற விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ–மாணவிகளுக்கு ரூ.13 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும்.

இதற்கு கடந்த 1.7.2017 முதல் 30.6.2018 முடிய உள்ள காலக்கட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் குழுப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களையும், தனிநபர் போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனம், இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆகியவற்றினால் போட்டிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்