காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் சாவு

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-02-21 22:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம், கீழண்டை தெரு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 60). இவர் கோவிந்தவாடி அகரம் காந்தி தெருவை சேர்ந்த கிருஷ்ணன் (65) என்பவரை அழைத்து கொண்டு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

திருணை சந்திப்பு என்ற இடத்தில் அவரது மோட்டார்சைக்கிள் வந்த போது, பின்னால் வந்த ஒரு காரின் டயர் வெடித்தது. இதில் கார் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கிருஷ்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விஸ்வநாதன் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்