ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் 120 ஜோடிகளுக்கு திருமணம் திருவாரூரில் இன்று நடக்கிறது

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் 120 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடக்கிறது.

Update: 2019-02-21 23:00 GMT
திருவாரூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 120 ஜோடிகளுக்கு திருமணம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் நடக்கிறது. திருமணத்தில் தங்கத்தாலி உள்பட 70 வகையான சீர்வரிசை பொருட்கள் மணமக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட உள்ளது.

விழாவிற்கு மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் தலைமை தாங்குகிறார். எம்.பி.க்கள் டாக்டர் கோபால், பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். விழாவில் கலந்து கொள்ளும் மணமக்களின் உறவினர்கள் மற்றும் பங்கு பெறும் அனைவருக்கும் உணவு வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த விழாவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்