மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு கணவன் கண் முன்னே நடந்த பரிதாபம்

கபிஸ்தலம் அருகே கணவன் கண் முன்னே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-02-21 22:15 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள கூனஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் தீனதயாளன். இவருடைய மனைவி பிரியா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. சம்பவத்தன்று தீனதயாளன் தனது மனைவி பிரியாவுடன் கூனஞ்சேரியில் இருந்து கும்பகோணத்துக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல திட்டமிட்டிருந்தார்.

அதன்படி அவர், மனைவி பிரியாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார். வீட்டு வாசலில் இருந்து மோட்டார் சைக்கிள் புறப்பட்டபோது எதிர்பாராதவிதமாக பிரியா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் பிரியாவின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம், பக்கத்தினர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் கண் முன்னே பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்