தாராபுரத்தில் மினி வேன் மோதி வாலிபர் சாவு சகோதரர் படுகாயம்
தாராபுரத்தில் மோட்டார்சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது சகோதரர் படுகாயம் அடைந்தார்.
தாராபுரம்,
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவருக்கு சியாம்மோகன் (வயது 24) சுரேஷ் (21) என்கிற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் தாராபுரம் வழியாக திருச்சூருக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்டிச்சென்றார்.
பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த மினி வேன் ஒன்று திடீரென வலது புறமாக திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது அந்த வேன் மோதியது.
இந்த விபத்தில் சியாம்மோகனும், சுரேஷும் படுகாயம் அடைந்தனர். அருகே இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சியாம் மோகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.