சேதுபாவாசத்திரம் அருகே புயல் நிவாரணத்தொகை வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்

சேதுபாவாசத்திரம் அருகே புயல் நிவாரணத்தொகை வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2019-02-21 23:00 GMT
சேதுபாவாசத்திரம்,

கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் 15-ந் தேதி தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை கஜா புயல் தாக்கியது. இதில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. பலர் வீடுகளை இழந்தனர். புயலில் முழுமையாக சேதம் அடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரமும், பகுதி அளவு சேதம் அடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.4,100-ம், ஓட்டு வீடுகளுக்கு ரூ.5 ஆயிரத்து 200-ம் நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

புயல் தாக்கி 98 நாட்கள் கடந்து விட்ட பின்னரும் அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை.

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள நாடியம் ஊராட்சியில் புயலில் சேதம் அடைந்த 110 வீடுகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல மீன்பிடி படகுகளை இழந்தவர்களுக்கும் நிவாரணத்தொகை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அரசு அறிவித்த நிவாரணத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி கிராம மக்கள் சேதுபாவாசத்திரம்-பட்டுக்கோட்டை சாலை நாடியம் முக்கம் பகுதியில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்