சேலத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை தகவல்

சேலத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது என்று போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை கூறினார்.

Update: 2019-02-22 22:30 GMT

சூரமங்கலம், 

சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சாஸ்தா நகர் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் செல்வராஜ் வரவேற்று பேசினார். துணை கமி‌ஷனர் தங்கதுரை தலைமை தாங்கி 70 கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சேலம் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. முதன் முதலாக சேலத்திற்குத்தான் தமிழக அரசு கடந்த 2015–ம் ஆண்டு 200 கண்காணிப்பு கேமராக்களை வழங்கியது. இவை சேலத்தில் பல முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு கேமரா பொருத்துவதில் பொது மக்கள் பங்கு அதிகம் இருக்க வேண்டும். மாநகர் முழுவதும் இதுவரை 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள், சேலம் மாநகர் முழுவதும் வரவேண்டும் என்பதே காவல்துறையின் விருப்பம் ஆகும். இதை அடைவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை.

இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்படும். போலீசாரின் கடும் நடவடிக்கையால், சேலத்தில் கடந்த 2017–ம் ஆண்டை விட, 2018–ம் ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் உதவி கமி‌ஷனர் பாலசுப்பிரமணியன் உள்பட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்