சேலத்தில், மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

சேலத்தில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-02-22 22:00 GMT
சூரமங்கலம், 

சேலம் சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் டேனியல். இவர் சேலம் ரெயில்வே கோட்டத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரோஸ்(வயது 47). நேற்று முன்தினம் இவர்கள் மோட்டார் சைக்கிளில் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அங்கு துணிகள் எடுத்துவிட்டு இரவில் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர். இவர்கள் சேலம் ஜங்சன் அருகே உள்ள புதுரோடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் பீட்டர் டேனியல் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

அவர்களில் ஒருவன் திடீரென ரோஸ் அணிந்திருந்த 6 பவுன் நகையை வேகமாக பறித்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், திருடன் என்று கூச்சலிட்டனர். இவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் நகையை பறித்து கொண்டு மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்