கொட்டாரத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணி தொடங்கியது

கன்னியாகுமரி கொட்டாரத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2019-02-23 22:45 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கொட்டாரம், அச்சன்குளத்தில் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. பொதுவாக பெரிய, மற்றும் சிறிய பூநாரை பறவைகள் அதிக அளவில் வருகின்றன. இதையடுத்து இங்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பறவைகள் சரணாலம் அமைக்க வனத்துறை ஏற்பாடு செய்தது. இதற்காக ரூ. 10 லட்சம் செலவில் பணிகள் தொடங்கியது.

முதற்கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தாமரை கொடிகளை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குளத்தில் நடைபெற்ற மீன் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. குளத்தின் இருபுறமும் இரும்பு சங்கிலி வலைகளால் தடுப்பு வேலி, பொதுமக்கள் நடந்து செல்ல அலங்கார நடைபாதை போன்றவை அமைக்கப்படுகிறது.

மேலும் குளத்தின் நடுவே மண்நிரப்பி தீவு அமைத்து, அந்த தீவுக்கு செல்ல படகு சவாரி விடப்படுகிறது. குளத்தின் கரையில் அமர்ந்து பார்த்து ரசிப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்படு கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்பாடுகளை மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் செய்து வருகிறார். இதுபோல், சுசீந்திரம்குளம், தேரூர்குளம், பறக்கைகுளம், பாறைகாத்தான் குளம், நரிக்குளம், கோதண்டராமன்குளம், தட்டையார்குளம், மாணிக்கபுத்தேரிகுளம், பால்குளம் போன்ற குளங்களிலும் பறவைகள் சரணாலயம் அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்