ஓட்டப்பிடாரம் அருகே பரிதாபம் நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-02-24 22:45 GMT
ஓட்டப்பிடாரம், 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி கொம்பாடி தளவாய்புரத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் கனகராஜ் (வயது 20). இவர் தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடன் முத்தையாபுரத்தை சேர்ந்த மங்களம் (21) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மங்களம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் கதறி அழுதார். தொடர்ந்து மங்களம் உடல் அடக்கம் முடியும் வரை உடன் இருந்தார். அடக்கம் முடிந்த பிறகு வீடு திரும்பிய கனகராஜ், நண்பர் இறந்த துக்கத்தில் இருந்து மீளாமல் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கனகராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது அவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் தனியாக இருந்த கனகராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்ற பெற்றோர் மாலையில் வீட்டுக்கு வந்த போது, கனகராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து உடனடியாக மணியாச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்