கடலூர் பஸ் நிலையத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கடலூர் பஸ் நிலையத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.

Update: 2019-02-25 23:30 GMT
கடலூர்,

செய்தி-மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி கடலூர் பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அரசின் நலத்திட்டங்கள் அடங்கிய புத்தகத்தை அமைச்சர் வெளியிட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

இந்த கண்காட்சியில் விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், அரிசி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கத்துடன் நிதிஉதவி, பசுமை வீடுகள் கட்டும் திட்டம், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள், பாடபுத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள், சைக்கிள், மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அம்மா குடிநீர், உணவகம், மருந்தகம், பண்ணை பசுமை காய்கறி நுகர்வோர் திட்டம், கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

தொடக்க நிகழ்ச்சியில் கடலூர் சப்-கலெக்டர் சரயூ, அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ஜே.சுந்தரம், நகரசபை முன்னாள் தலைவர் குமரன், முன்னாள் துணை தலைவர் சேவல்குமார், தாசில்தார் சத்யன், தேர்தல் தாசில்தார் பாலமுருகன், அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர்கள்(வணிகம்) கே.சுந்தரம், முருகானந்தம்(இயக்கம்), பன்னீர்செல்வம்(பஸ்நிலையம்), முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்செல்வம், ராமச்சந்திரன், சாந்தி, ஆர்.வி.மணி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்