மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து வாகனம் மோதி டாக்டர் பலி

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் டாக்டர் பலியானார்.

Update: 2019-02-25 22:45 GMT
மும்பை, 

மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் வசித்து வந்தவர் பிரகாஷ் மல்தாவா(வயது48). டாக்டரான இவர், கோரேகாவ் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் கிளினிக்கில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

கோரேகாவ் கிழக்கு, ஆரே ரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக சென்ற வாகனம் டாக்டரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த டாக்டர் மீது அந்த வாகனத்தின் சக்கரம் ஏறியது.

இதில், உடல் நசுங்கிய டாக்டர் பிரகாஷ் மல்தாவாவை போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரகாஷ் மல்தாவா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டாக்டர் மீது மோதிய வாகனம் எது, அதை ஓட்டி சென்றவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்