திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு

திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-02-26 23:15 GMT

திருப்பூர்,

திருவண்ணாமலை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பார்த்தீபன்(வயது 29). இவர் கடந்த 2014–ம் ஆண்டு திருப்பூர் மும்மூர்த்தி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 24–11–2014 அன்று பார்த்தீபன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பீகார் தொழிலாளியின் 4 வயது மகள் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தாள்.

அங்கு சென்ற பார்த்தீபன் சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து தனியாக அழைத்துச்சென்றார். வீட்டுக்கு அருகே துணி துவைக்கும் இடத்தில் வைத்து பார்த்தீபன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். உடனே அந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் தனது கணவரிடம் விவரத்தை தெரிவித்தார்.

பின்னர் சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தீபனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பார்த்தீபனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்