இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நம்புதாளை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நம்புதாளை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கலெக்டரிடம் மனு அளிஹ்தனர்.

Update: 2019-02-26 23:15 GMT
ராமநாதபுரம்,

திருவாடானை தாலுகா நம்புதாளை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் தலைமையில் 20–க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பவயல் கிராமத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்புதாளையை சேர்ந்த செல்வேந்திரன்(வயது 42), ராம்குமார்(40), கோவிந்தராஜ்(42), பெரியசாமி(49), காளிதாஸ்(49) ஆகியோர் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கமாக மீன்பிடிக்கும் இடத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 மீனவர்களையும், படகையும் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

நாட்டுப்படகில் பாரம்பரிய முறையில் மீன்பிடித்த மீனவர்களை கைது செய்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இவ்வாறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து படகையும், மீனவர்களையும் மீட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்