சேலத்தில் குண்டர் சட்டத்தில் பெண் கைது

சேலத்தில் வீட்டில் மது பதுக்கி விற்ற பெண் ஒருவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-28 21:45 GMT
சேலம், 

சேலம் ஜாகீர்அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி பரிமளா (வயது 50). இவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இடையூறு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் கடந்த 9-ந் தேதி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சூரமங்கலம் போலீசார் பரிமளா மற்றும் அவருடைய உறவினர் பழனியம்மாள் ஆகியோர் வீடுகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 718 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதில் சில மதுபாட்டில்களில் போதைக் காக நச்சுப்பொருளை சேர்த்து இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிமளாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது அனுமதியின்றி மது விற்பனை செய்தது தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் உள்ளன. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் பரிமளாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சூரமங்கலம் போலீசாரும், துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரையும் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சிறையில் உள்ள பரிமளாவிடம் போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்