மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலி

செம்மஞ்சேரியில் எருமைமாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலியானார்.

Update: 2019-03-01 00:10 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த செம்மஞ்சேரி எழில்நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 68). கார் டிரைவரான இவர் பணியை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சித்தாலபாக்கம் வழியாக செம்மஞ்சேரிக்கு சென்றுகொண்டு இருந்தார்.

பெரும்பாக்கம் நுக்கம்பாளையம் உள்வட்ட சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எருமை மாடு ஒன்று திடீரென சாலையை கடக்க முயன்றது. இதை எதிர்பார்க்காத ராமசந்திரன் நிலைதடுமாறினார்.

அவர் சென்ற மோட்டார் சைக்கிள் எருமை மாட்டின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த டிரைவர் ராமச்சந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்