சேலத்தில் ஓடும் பஸ்சில் வாலிபரிடம் 20 பவுன் நகை அபேஸ்

சேலத்தில் ஓடும் பஸ்சில் வாலிபரிடம் 20 பவுன் நகை அபேஸ் செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-03-01 22:45 GMT
சேலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திருப்பூர் மாவட்டம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் துரை (வயது 30). இவர் கடந்த மாதம் 24-ந் தேதி தனது குடும்பத்தினருடன் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினர் ஒருவருடைய திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதையடுத்து அங்கிருந்து அவர்கள் சேலம் தாதகாப்பட்டியில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு வந்தனர்.

பின்னர் துரை குடும்பத்தினருடன் குரங்குச்சாவடி பகுதிக்கு சென்றுவிட்டு, ஊருக்கு திரும்புவதற்காக சேலம் புதிய பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து திருப்பூர் செல்வதற்காக அவர்கள் பஸ்சில் ஏறினர். பஸ் கொண்டலாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது துரை வைத்திருந்த பையை காணவில்லை. அந்த பையில் 20 பவுன் நகை இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை வைத்திருந்த பையை மர்ம ஆசாமிகள் அபேஸ் செய்திருக்கலாம் என்று அவர் கருதினார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் வாலிபரிடம் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்