பம்மலில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பல்லாவரம் அருகே பம்மலில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-02 22:30 GMT
தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு பகுதியில் கடந்த 3 மாதங்களாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. லாரிகள் மூலமும் சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் உள்பட பொதுமக்கள், குடிநீர் கேட்டு நேற்று மதியம் பல்லாவரத்தில் இருந்து பம்மல் செல்லும் அண்ணாசாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, “எங்கள் பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக சரியான முறையில் குடிநீர் வரவில்லை. இதுபற்றி பம்மல் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சங்கர்நகர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பம்மல் நகராட்சி அதிகாரிகளிடம் இதுபற்றி பேசி முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்