கூடங்குளம் அருகே பரிதாபம்: கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

கூடங்குளம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-03-02 22:21 GMT
கூடங்குளம்,

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் சிவா (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் சிவா நேற்று அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார். அங்கு கிணற்றில் இறங்கி குளித்து விட்டு வெளியே வரும்போது எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

சிறிது நேரத்தில் சிவாவை அவரது பெற்றோர் தேடியபோது அவர் கிணற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சிவாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்