சூளகிரி அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

சூளகிரிஅருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-03-03 22:00 GMT
சூளகிரி,

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நேரு நகரில் வசித்து வருபவர் ராஜா (வயது 48). இவர் சூளகிரி அருகே உள்ள செம்பரசனப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகவேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அவரும் விற்பனையாளர்கள் சந்திரன், பெருமாள் ஆகியோரும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

அந்த வழியாக பொதுமக்கள் சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மேற்பார்வையாளர் ராஜா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது நள்ளிரவு மர்ம நபர்கள் அங்கு வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்ததும், அவர்கள் கடையில் வைத்திருந்த 137 மது பாட்டில்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.23 ஆயிரத்து 160 ஆகும்.

இது குறித்து மேற்பார்வையாளர் ராஜா சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்