கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு உதவி: சேமிப்பு பணத்தில் ரூ.1½ லட்சம் வழங்கிய சிறுமி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பாராட்டு

நகர் முழுவதும், போலீசார், தனியார் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

Update: 2019-03-03 23:00 GMT
சென்னை,

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் நகர் முழுவதும், போலீசார், தனியார் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு போலீசாருக்கு சென்னையை சேர்ந்த 9 வயது சிறுமி ரூ.1½ லட்சம் வழங்கி உள்ளார்.

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த சத்யநாராயணா என்பவரின் மகள் ஸ்ரீஹிதா(வயது 9). 3-ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்ரீஹிதா கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராயப்பேட்டையில் உள்ள தனது தந்தை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து சிறுமி ஸ்ரீஹிதா, தனது தந்தையிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார், பல குற்றவாளிகளை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமி ஸ்ரீஹிதா தனது சேமிப்பு பணத்தில் ரூ.1½ லட்சத்தை கேமராக்கள் பொருத்துவதற்கு வழங்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

அதன்படி ஸ்ரீஹிதா தனது தந்தை சத்யநாராயணாவுடன் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து ரூ.1½ லட்சத்தை வழங்கினார். இதனையடுத்து சிறுமி ஸ்ரீஹிதாவை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் வரவழைத்து பாராட்டினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்