தாம்பரம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

தாம்பரம் அருகே, நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-03-04 23:15 GMT
தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென், அன்னை சத்யா நகர், நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவருடைய மகன் முகேஷ் (வயது 10). இவன், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு வடித்து வந்தான்.

நேற்று முன்தினம் மாலை தனது பெற்றோரிடம் விளையாடி விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றான். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் முகேசை காணவில்லை.

இதுபற்றி சேலையூர் போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அங்குள்ள ஏரியில் மாணவன் முகேஷ், பிணமாக மிதந்தான். இதுபற்றி தகவல் அறிந்துவந்த சேலையூர் போலீசார், ஏரியில் மிதந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், மாணவன் முகேஷ், தனது நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச்சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டது தெரிந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்