புவனகிரியில், வேன் மோதி மாணவன் சாவு - பள்ளிக்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்

புவனகிரியில் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய மாணவன் வேன் மோதி பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-03-04 22:30 GMT
பரங்கிப்பேட்டை,

புவனகிரி அருகே சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் மகேந்திரன் (வயது 11). இவன் புவனகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 7-வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மகேந்திரன் தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்றான்.

பின்னர் பள்ளி முடிந்தது அதே சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டான். புவனகிரி பஸ் நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பள்ளி வேன் ஒன்று மகேந்திரன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இது குறித்த தகவலின் பேரில் புவனகிரி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த மகேந்திரனின் உறவினர்கள் கதறி அழுதனர். விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்