விபத்தில் இறந்த என்ஜினீயர் உள்பட 2 பேரின் குடும்பங்களுக்கு ரூ.24¾ லட்சம் நஷ்டஈடு கோர்ட்டு உத்தரவு

விபத்தில் இறந்த என்ஜினீயர் உள்பட 2 பேரின் குடும்பங்களுக்கு ரூ.24¾ லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-03-05 22:15 GMT
தஞ்சாவூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் மேல்பாதி மன்னையார் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் நீதிதேவன்(வயது 27). என்ஜினீயரான இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3-11-2017 அன்று நீதிதேவன் தனது நண்பவருடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு உறவினரை பார்க்க வந்தார். பின்னர் மீண்டும் மன்னார்குடிக்கு திரும்பினார். தஞ்சை- மன்னார்குடி சாலையில் வாண்டையார் இருப்பு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மினி லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நீதிதேவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நீதிதேவனின் குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து ரூ.21 லட்சத்து 72 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு திருச்சி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

தஞ்சை காவேரி நகரை சேர்ந்தவர் பேச்சிமுத்து(72). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், கடந்த 27-1-2018 அன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பேச்சிமுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தஞ்சை போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பேச்சிமுத்துவின் குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் வழங்குமாறு கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

இந்த 2 வழக்குகளிலும் சேர்த்தும் மொத்தம் ரூ.24 லட்சத்து 82 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்