எடை அளவுகளை முத்திரையிடும் அலுவலகம் அமைத்து அதிகாரியை நியமிக்க வேண்டும்

எடை அளவுகளை முத்திரையிடும் அலுவலகம் அமைத்து அதிகாரியை நியமிக்க வேண்டும் வணிகர் நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்.

Update: 2019-03-05 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பான மாவட்ட வணிகர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டமன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்யா நடராஜன் தலைமை தாங்கினார். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து கூட்டத்தில் காஷ்மீரில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிப்பது. பெரம்பலூர் மாவட்ட 2-வது மாநாட்டை வருகிற மே மாதம் 5-ந் தேதி வணிகர்கள் ஊர்வலத்துடன் சிறப்பாக நடத்துவது. எடை அளவுகளை முத்திரையிடும் தேதியை நகரத்திற்கும், கிராமப்பகுதிகளுக்கும் தனித்தனியே அறிவிக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்திற்கு முத்திரையிடும் அலுவலகத்தை தனியாக திறந்து அதற்குரிய தலைமை அதிகாரியை நியமிக்க வேண்டும். தற்போது ஆண்டுக்கு ஒருமுறை எடை அளவுகளுக்கு முத்திரையிடப்படுகிறது. 2 ஆண்டுக்கு ஒருமுறை முத்திரையிடும் பழைய முறையை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் முகமதுரபீக், பொது செயலாளர் நல்லதம்பி, பொருளாளர் வினாயகா ரவிச்சந்திரன், ஜவுளிக்கடை உரிமையாளர் தனபால், துணை செயலாளர் மளிகைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் ஓம்சக்தி குமார் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்