திருமணம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னையில் திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த வாலிபரின் தாய் மற்றும் உறவினரும் சிக்கினார்கள்.

Update: 2019-03-05 22:15 GMT
அடையாறு,

சென்னை நங்கநல்லூர் எம்.ஜி.ஆர் சாலையை சேர்ந்தவர் தனுஷ் என்ற தனசேகர் (வயது 20). திருவான்மியூரில் உள்ள ஒரு அரசு பள்ளி அருகே தள்ளுவண்டியில் திண்பண்டங்கள் வியாபாரம் செய்து வருகிறார். அப்போது அதே பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது,

மாணவியுடன் தொடர்ந்து பழகி வந்த தனுஷ், அவரை காதலிப்பதாக கூறி அவருடன் பல இடங்களில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நங்கநல்லூரில் உள்ள தனது வீட்டிற்கு தனுஷ் மாணவியை கடத்திச்சென்று தங்க வைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இந்த நிலையில், பள்ளிக்குச் சென்ற தனது மகள் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து சாஸ்திரிநகர் போலீசில் அவர்கள் புகார் அளித்தனர். அடையாறு உதவி கமிஷனர் வினோத் சந்தராம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலவேஷம் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாணவியை தேடி வந்தனர். அதில், மாணவி தனுஷுடன் நெருங்கி பழகியதும், சம்பவத்தன்று அவருடன் சென்றதையும் கண்டுபிடித்தனர்.

பின்னர் அடையாறு பகுதியில் சுற்றி திரிந்த தனுஷை போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து, நங்கநல்லூரில் தனுஷின் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவியை மீட்டனர்.

பிடிபட்ட தனுஷிடம் விசாரணை நடத்தியதில், மாணவிக்கு திருமண ஆசை காட்டி அழைத்து சென்றது தெரிய வந்தது. மேலும் தனுஷுக்கு உடந்தையாக அவரது தாயார் சத்யா (40) மற்றும் சித்தப்பா அன்பழகன் (40) ஆகியோரும் இருந்துள்ளனர். பின்னர் 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சாஸ்திரி நகர் போலீசார் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மீட்கப்பட்ட மாணவியை போலீசார் அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்