ஹெல்மெட் அணிந்து சென்றும் தலையில் படுகாயம்: மோட்டார்சைக்கிளில் சென்ற என்ஜினீயர் விபத்தில் சாவு

ஹெல்மெட் அணிந்து மோட்டார்சைக்கிளில் சென்ற என்ஜினீயர் விபத்தில் தலையில் படுகாயம் அணிந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-03-06 18:54 GMT

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி வாலிபர் ஒருவர் தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தார். இவர் திம்பம் மலைப்பாதை முதலாவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டார்கள்.

பின்னர் அவரது சட்டைப்பையில் இருந்த காகிதத்தை எடுத்து பார்த்தபோது அதில், அவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் கதிரேசன் (வயது 25) என்று இருந்தது. மேலும் நடத்திய விசாரணையில் அவர், கருமத்தம்பட்டியில் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார். தாளவாடி அருகே தொட்டம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு விசே‌ஷத்துக்கு சென்றபோது இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்