பண்ருட்டி அருகே, மர வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை

பண்ருட்டி அருகே பட்டப்பகலில் மரவியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-03-11 22:30 GMT
பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). மரவியாபாரி. இவர் நேற்று முன்தினம் மதியம் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றார். அவரது மனைவி கலைச்செல்வியும்(49) வீட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் கலைச்செல்வி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கதவும் திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது ஒரு அறையில் பீரோ மற்றும் அலமாரியில் இருந்த 27 பவுன் நகைகள், ரூ.1¼ லட்சம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.

இது பற்றி கலைச்செல்வி தனது கணவர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். வெளியூர் சென்றிருந்த அவர், உடனடியாக வீட்டிற்கு வந்தார். மேலும் இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கலைச்செல்வியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் வெளியூர் சென்றதும். நான் வீட்டின் கதவை பூட்டிவிட்டு அதன் சாவியை மின் மீட்டர் பாக்ஸ் அருகில் வைத்தேன். பின்னர் முன்பக்க கேட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றேன். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், முன்பக்க கேட்டை உடைத்து, மின் மீட்டர் பாக்ஸ் அருகில் வைத்திருந்த சாவியை எடுத்த, கதவை திறந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்று கூறினார்.

இதையடுத்து கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டை மோப்பமிட்ட அந்த நாய், சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்று விட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து, கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கை ரேகைகளையும், தடையங்களையும் சேகரித்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மரவியாபாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்